Total Pageviews

Friday, December 3, 2021

வலைதமிழ் இணையதளம்

 இந்தத் தளத்தில் தமிழ் எழுத்தாளர்களுக்கும், மொழிபெயர்ப்பாளர்களுக்கும் தேவையான பல்வேறு கருவிகள் கிடைக்கின்றன. அதோடு Natural Language Processing குறித்த பல்வேறு கட்டுரைகளும் உள்ளன. 


www.valaithamil.com 

Thursday, April 8, 2021

திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக எந்தக் கட்சி வர வேண்டும்?

 சமீபத்தில் தான் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்தது. தி.மு.க நிச்சயம் வெற்றிபெற்றுவிடும் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவித்துவிட்ட நிலையில், அ.தி.மு.க அழிந்துவிடுமா? அல்லது அ.தி.மு.க வெற்றிபெற்றால் தி.மு.க அழிந்துவிடுமா? என்பது போன்ற பல்வேறு கேள்விகள் மக்களிடையே எழத்தொடங்கியுள்ளன. 

இச்சூழலில் திராவிடக் கட்சிகள் குறித்து பல்வேறு கட்சிகள் பல விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டு வந்துள்ளன. அவை பின்வருமாறு

1. வாரிசு அரசியல்

2. ஊழல் 

3. கார்ப்பரேட் கைகூலி

4. மக்களுக்கு எதிரான கொள்கைகள்

5. மதவாத சக்திகளுக்குத் துணை போகுதல்



சரி, அப்படியானால் தி.மு.க மற்றும் அ.தி.மு.க கட்சிகளுக்கு எந்த கட்சி மாற்றாக இருக்க இயலும். தற்போது போட்டியிட்ட கட்சிகளின் அடிப்படையில் நாம் இதற்கான தீர்வைக் காண்போம். 

நாம் தமிழர் கட்சி: தற்போதைய சூழலில் பல இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளனர். அதற்கு முக்கியமான காரணம் திராவிடக் கட்சிகள் மீதான வெறுப்பு. இது தவிர மொழிரீதியாக கன்னடர், தெலுங்கர், ஆங்கிலேயர் என்று பிற மொழியைச் சார்ந்தவர்கள் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள், அவர்களிடம் இருந்து தமிழையும் தமிழ் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்கிற உணர்வை மிகவும் ஆழமாக இந்தக் கட்சி இளைஞர்கள் மத்தியில் விதைத்து வருகிறது. இக்கட்சியின் பேச்சாளர்கள் சத்தத்தை அதிகமாக உயர்த்திப் பேசுவதுடன் நாட்டு நாய், நாட்டு மாடு வளர்ப்பு, வீட்டிலேயே பிரசவம் பார்த்தல் உள்ளிட்ட பாரம்பரிய கருத்தியல்களைக் கூறுவது உண்டு. அ.தி.மு.க அழியும்பட்சத்தில் அடுத்த இடத்திற்கு நாம் தமிழர் வந்துவிடும் என்பதில் வெகு சிலருக்கே சந்தேகம் இருக்கும். 

ஆனால், மேலே திராவிடக் கட்சிகளிடம் கூறப்பட்ட குறைகள் இங்கும் உள்ளன. 1. ”சீமான்” என்கிற ஒற்றை நபரைச் சுற்றியே இவர்களது கட்சி முழுமையும் சுழன்றுகொண்டு இருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது. 

2. சமீபத்தில் நியமிக்கப்பட்ட 19 நிர்வாகிகளில் 18 பேர் ஒரே சாதியைச் சார்ந்தவர்களாக இருப்பதால், இந்தக் கட்சியும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கான கட்சியாக மாறி வருகிறதோ என்கிற ஐயமும் மக்கள் மத்தியில் எழத்தான் செய்கிறது. 

3. பிரபாகரன் குறித்து சீமான் அடிக்கடி கூறும் ஆமைக்கறி, இட்லிகறி கதைகள் பலரின் கேலிப்பேச்சுக்கு உள்ளாகி வருகின்றன. 

4. தீக்குளித்து இறந்த கட்சித் தொண்டருக்காக வசூலித்த பணத்தில் பெரும்பகுதியை சீமான் சுரண்டிவிட்டார் என்றும், வெவ்வேறு ஆண்டு வருமான விவரங்களை வேட்புமனுவில் தாக்கல் செய்தார் என்கிற புகாரும் சீமான் மீது அடுக்கடுக்காகக் கூறப்படும் பல்வேறு புகார்களில் சில ஆகும். 

5. பா.ஜ.க-வின் மதரீதியான பாகுபாட்டிற்குச் சற்றும் சளைத்ததல்ல சீமானின் மொழிரீதியான வெறுப்புப்பேச்சு என்பது பலரது கருத்து. அதேபோல், உருது பேசும் இஸ்லாமியர்கள் தமிழர்கள் அல்ல என்றும், கிறிஸ்தவர்கள் தமிழர்கள் அல்ல என்றும், சமஸ்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள சமூகத்தினர் தமிழர்கள் தான் என்றும் கூறும் விஷயங்களில் இவர்களும் அதே வெறுப்பு அரசியலைக் கையாள்வதாக கருதப்படுகின்றனர். 


2. மக்கள் நீதி மய்யம்

அதிமுக கட்சிக்கு எவ்வாறு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஒற்றை ஆளுமையாக இருந்தார்களோ அதேபோல் மக்கள் நீதி மய்யத்தைப் பொருத்தவரை கமல்ஹாசன் அத்தகைய ஒற்றை ஆளுமையாஅ இருக்கிறார். இவருக்குப் பிறகு யார் இவருடைய கட்சியை முன்சென்று நடத்துவார்கள் என்பதில் தற்போது தெளிவு எதுவும் இல்லை. 66 வயதைக் கடந்துவிட்ட நிலையில் அடுத்த 5 ஆண்டுகளில் 70களைத் தாண்டிவிடுவார்.  அதன் பின்னர் இக்கட்சியின் நிலை தற்போதைய அ.தி.மு.க-வின் நிலையாக மாறக்கூடும். 

கொள்கைரீதியாகப் பேசினால் கொள்கை என்று எதுவும் தமக்கு இல்லை மக்கள் நலனே எம் கொள்கை என்று கமல் கூறிவிட்டாலும், எந்த மக்கள் தங்கள் நலனை இவர் காப்பார் என்று நம்புகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

மும்மொழிக்கொள்கை, அரசாங்கப் பொதுத்தேர்வு மாணவர்களின் திறனை முழுமையாகப் பரிசோதிப்பது இல்லை போன்ற கருத்துகளில் இவர் பா.ஜ.க-வுக்கு நிகரான கொள்கையையே கொண்டு இருக்கிறார். 

மருதநாயகம் திரைப்படத்திற்கு வாங்கிய கடனை மய்யம் கட்சிக்காக மக்கள் கொடுத்த நன்கொடையில் இருந்து திரும்பச் செலுத்தியதாக ஒரு வதந்தி நிலவுகிறது. சமூகரீதியான இட ஒதுக்கீட்டைப் பற்றிய கருத்திலும் இவருக்கும் இவருடைய கட்சியைச் சார்ந்தவர்களுக்கும் தெளிவில்லை என்பது இவர்கள் பதில் கூறுவதில் காட்டும் தயக்கத்தில் இருந்து வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. 

ஊழலுக்கு எதிரானக் கட்சியாக தன்னைக் காட்டிக்கொண்டாலும் இவருடைய கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர்கள் காசோலை மோசடியில் சிக்கி இருப்பது இவரது நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ளது. 


3. கம்யூனிஸ்ட்


இந்தக் கட்சியைப் பொருத்தவரை எந்த சாதிக்குமான கட்சி அல்ல. பல காலமாகவே மக்களுக்கு நன்கு பழக்கப்பட்ட கட்சி. வாரிசு அரசியல் கிடையாது. தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் எந்தப் பிரச்சனை வந்தாலும் முதலில் போராட்டத்தில் இறங்குவது கம்யூனிஸ்ட் கட்சி தான். ஒரு தலைவர் இல்லாவிட்டாலும் சக தோழர்களில் மற்றொருவர் தலைமை தாங்கி நடத்தக்கூடியவர். உலகம் முழுவதும் இயங்கும் கட்சி ஆதலால் பிற்காலத்தில் இந்தியா முழுவதிலும் கூட பெருவாரியான இடங்களில் வெற்றிபெறலாம். கம்யூனிஸ்ட் சின்னமும் எல்லோருக்கும் அத்துப்படியான ஒரு சின்னம். எந்த கம்யூனிஸ்ட் தலைவர் மீதும் ஊழல் புகாரில்லை. 

மதவாத சக்திகளை வேரறுப்பதற்காக அவ்வப்போது திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டாலும் அதிமுக அல்லது திமுக இல்லாமல்போகும்பட்சத்தில் மதவாதம் இல்லாத சித்தாந்தம் கொண்ட கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி நிச்சயம் ஒரு நல்ல, அரசியல் மாண்புகள் நிறைந்த ஒரு கட்சியாக உருவெடுக்க வேண்டும் என்பதே என் ஆவல். 

Monday, January 25, 2021

தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை

 தினமலர் டீக்கடை பெஞ்ச் பகுதியில் காவல் ஆய்வாளர் மீது அவதூறு செய்தி வெளியிட்டது சம்பந்தமாக தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு 2 வருட சிறை தண்டனை மற்றும் 10லட்சம் அபராதம் விதித்து வழங்கப்பட்ட தீர்ப்பு.2019 செய்தி தவறான, ஆதாரங்களற்ற செய்தியினை வெளியிட்ட தினமலர் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

கிருஷ்ணகிரியில் கடந்த 2005 ஆம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் முத்தமிழ் முதல்வன். அப்போது தினமலர் நாளிதழில் வரும் டீக்கடை பெஞ்ச் பகுதியில் இவர் சட்டவிரோதமாக கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு மதுபானங்கள் கடத்துவதை அனுமதித்து அதற்காக லஞ்சம் பெற்றதாகவும், அந்த லஞ்சப்பணத்தில் சொத்து வாங்கியதாகவும் செய்தி வெளியிட்டது.
இதனால் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் முதல்வன், தினமலரிடம் 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர்கள் பதிலளிக்காததை அடுத்து கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜரான தினமலர் வழக்கறிஞர் ‘செய்தி வெளியிடுவது நாளிதழ்களின் உரிமை’ என வாதாடினார்.
கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. தீர்ப்பில் ‘இந்த செய்தி ஆதாரங்களோடு வெளியிடப்படவில்லை. ஆனால் யூகங்களின் அடிப்படையில் வெளியான செய்தியில் ஏன் அதிகாரியின் பெயரைக் குறிப்பிடவேண்டும் ‘எனக் கேட்டு தினமலர் வெளியீட்டாளர் லட்சுமிபதி, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும் இருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என தீர்ப்பளித்துள்ளது.
காவல்துறையினர் கொண்டாட வேண்டிய தீர்ப்பு.
ஆனால் அனாதையாக கிடக்கிறது.
எதை எதையோ தேவையில்லாமல் ஷேர் பண்றோம்.
இதை கண்டிப்பாக ஷேர் பண்ணுங்க.
வைரல் ஆக்கவேண்டும்.
தினமலர் மாதிரியான பத்திரிக்கைகள் அதன் நிருபர்கள் நாணிக்கூச வேண்டும்.👆👆👆👆👆👆

Tuesday, January 19, 2021

மாலைமலர் கட்டுரையில் பிழை

 




இந்திய எல்லையில் சீனா கட்டுமான வேலைகளைச் செய்து வருவதாக வெளிவரும் செய்திகளை நாம் சமீபகாலமாகப் பார்க்கிறோம். ஆனால் கடந்த பல ஆண்டுகளாகச் சீனா அதைச் செய்து வருகிறது.

ஆதாரம்: https://www.maalaimalar.com/news/national/2021/01/18192038/2267107/China-Has-Built-Village-In-Arunachal-Show-Satellite.vpf

சந்திப் பிழைகள் 

Sunday, January 17, 2021

தோல்வியை எதிர்பாருங்கள்

தோல்விகள் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே நம் அனைவரது கனவாக இருக்கின்றது. ஆனாலும், அப்படிப்பட்ட வாழ்க்கை சாத்தியமற்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதோடு வெற்றியை மட்டுமே அடைய வேண்டும் என்று நினைப்பதால் ஏற்படும் இன்னல்கள் ஏராளம். 

சிறுவயதில் “நீ படிச்சு என்னவாக விரும்புற?” என்கிற கேள்விக்கு “மருத்துவராக விரும்புகிறேன்!” என்று ஒரு மாணவி கூறுகிறாள். அவள் கூறியதைப் போலவே பள்ளி பருவம் முதலாகவே அனைத்துப் பாடங்களிலும் முதல் மாணவியாகவே திகழ்கிறாள். முதல் முறையாக 12ஆம் வகுப்புக்குப் பின் நீட் தேர்வில் தேவையான மதிப்பெண் பெற்றும், முதல் 1000 மதிப்பெண்களுக்குள் வரமுடியவில்லை. முதல் முறையாக ஒரு தோல்வி, இதை ஏற்க விரும்பாமல் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறாள் அந்த மாணவி. இதன் காரணம் என்ன?

“தோல்வி அடைந்தால் வாழக்கூடாது!” என்று சமுதாயம் கற்றுக்கொடுக்கும் தவறான பாடமே காரணம். தோல்விகள் இன்றியமையாதவை, எல்லோரும் எல்லாவற்றிலும் வெற்றியே பெற முடியாது, தோல்விகளைக் கொண்டு வெற்றியின் பாதையைக் கண்டறிய வேண்டும். மக்களுக்குச் சேவை செய்வது தான் இலக்காக இருப்பின், வேறு வகையில் மக்களுக்குச் சேவை செய்வதை நோக்கி தன் மனதைச் செலுத்தி இருக்கலாம். அல்லது மருத்துவராவது தான் இலக்கு என்றால் என்ன செய்தால் மருத்துவராகலாம் என்பதைக் குறித்து தொடர்ந்து போராடலாம். இவ்வாறாக வாழ்க்கையை முடித்துக்கொள்வதால் என்ன கிடைக்கிறது? ஒன்றுமில்லை

படித்து முடித்தபின் என்ன செய்வதென்று யோசிக்கும்போது சில மாணவர்கள் யாரையாவது திருமணம் செய்யலாம் என்று நினைத்து ஏதோ ஒரு நபர் மீது காதல் கொள்கிறார்கள். தவறில்லை. மகிழ்ச்சியாக வாழத்தானே அந்தக் காதல். ஆனால், அதில் ஏதோ ஒரு வகையில் தோல்வி ஏற்பட்டுவிட்டால், உலகில் வேறு மனிதரே இல்லாதது போல தற்கொலை செய்வதும், காதலித்ததாகக் கூறும் நபரைக் கொலைசெய்வதும் ஏனோ? “தோல்வி அடைந்தால் வாழக்கூடாது!” என்று சமுதாயம் கற்றுக்கொடுக்கும் தவறான பாடம் தான். 

சினிமாவும், சமுதாயமும் பல நேரங்களில் “தோல்வியின் அவசியம்” குறித்து பேசாமல் தோல்வி என்பதே இல்லாதவர் தான் சிறந்தவர் என்பது போல பிரம்மையை உருவாக்கிச் சென்றுவிடுகின்றனர். இந்த பிரம்மையை ஏற்படுத்தியவர்கள் எத்தனைத் தோல்விகளைக் கண்டாலும் துடைத்து எறிந்துவிட்டு அடுத்தகட்ட முயற்சியை நோக்கிச் சென்றுவிடுகிறார்கள். ஒரே நபரைக் காதலித்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று திரைப்படத்தில் கூறிய நடிகர்கள் அதைத் தன் வாழ்க்கையில் கடைபிடித்தால் இன்னமும் அவர்கள் திருமணமாகாமல் தான் இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அப்படி இருப்பதில்லை. 


வெற்றி அடைந்தவர்கள் தோல்விகளை வாழ்க்கையின் முடிவாகக் காண்பதில்லை, மாறாக அதை ஒரு முயற்சியின் விளைவாக மட்டுமே பார்த்துவிட்டு அடுத்த முயற்சிக்குக் கடந்துசெல்கிறார்கள். அவர்களது இறுதி இலக்காக “மகிழ்ச்சியான வாழ்க்கை” என்பதை அடைய இடையில் ஏற்படும் “தோல்விகள்” எதையும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அதுவே வாழ்நாள் நீடிக்கவும், மகிழ்ச்சியில் மூழ்கவும் சிறந்த பாதையாக இருக்கும். 


தமிழ் மொழியைக் காப்பாற்றுவது எப்படி?

 தமிழ் மொழி உலகெங்கிலும் சுமார் 5 நாடுகளில் அதிகாரபூர்வ மொழியாக இருக்கிறது. இருந்தபோதிலும், தமிழை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு இந்தி மொழியைத் திணிப்பதில் அவ்வப்போது இந்திய அரசாங்கம் வேலைசெய்து வருவதை நாம் அறிவோம். 


பல இடங்களில் வங்கிகளில் தமிழ் மொழி நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக இந்தி மொழி திணிக்கப்பட்டு வருகின்றது. ரயில் நிலையங்களில் இந்தியில் மட்டும் பலகைகள் வைக்கப்படும் சூழல்களையும் பார்த்தோம். விமான நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் தமிழ் அறியாத மக்களைப் பணியமர்த்தியதைப் பார்த்தோம். இன்னும் தொடர்ந்து இது போன்ற பல சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. 











அப்படியானால் நம் தமிழ் மொழியைத் தொடர்ந்து பயன்பாட்டில் வைத்து இருப்பதற்கும், அடுத்த சந்ததியருக்கும் தமிழ் மொழி கிடைக்கச் செய்வதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும்? 


அரசாங்கம் மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள் பலவும் தற்போது தங்கள் இணையதளங்கள், செயலிகள் மற்றும் பிற மென்பொருட்களைத் தமிழில் வெளியிட்டு வருகின்றன. அவற்றை எந்த அளவுக்கு நாம் பயன்படுத்துகிறோம் என்பதன் அடிப்படையிலேயே அவை தொடர்ந்து தமிழாக்கம் செய்வதற்கான ஊக்கம் அந்தந்த நிறுவனங்களுக்குக் கிடைக்கும். 

உதாரணத்திற்கு Gpay, PhonePe, YouTube, நீங்கள் பயன்படுத்தும் ஆண்டிராய்டு மொபைல், ATM உள்ளிட்ட அனைத்தையும் தமிழில் பயன்படுத்துவேன் என்று உறுதிகொள்ளுங்கள். 

அந்த இணையதளங்களிலும் மென்பொருட்களிலும் இருக்கும் தமிழ் உங்களுக்குப் புரிகிறதா இல்லையா? ஏதேனும் உங்களுக்குச் சிரமமாக உள்ளதா? என்பவற்றை எல்லாம் குறித்து தொடர்ந்து அந்தந்தத் தளங்களில் கருத்து தெரிவியுங்கள். இது அந்தந்தச் செயலிகளையும் மென்பொருட்களையும் தமிழ் மொழி மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் மேம்படுத்துவதற்கு உதவுவதாக இருக்கும்.  

கீழ்க்காணும் ’தமிழ்’ சவாலில் நீங்கள் எவ்வளவு மதிப்பெண் வாங்குகிறீர்கள் என்பதை இடுகையாகப் பதிவுசெய்யுங்கள்
தமிழ் மொழியில் வாசகம் கொண்ட டி-சர்ட் அணிந்தது உண்டா?
ஆம் (ஆம்:10, இல்லை: 0)
தமிழ் மொழியில் Gpay பயன்படுத்துகிறீர்களா?
ஆம்(ஆம்:10, இல்லை: 0)
தமிழ் மொழியில் Facebook பயன்படுத்துகிறீர்களா?
ஆம்(ஆம்:10, இல்லை: 0)
தமிழ் மொழியில் PhonePe பயன்படுத்துகிறீர்களா?
ஆம்(ஆம்:10, இல்லை: 0)
தமிழ் மொழியில் Amazon பயன்படுத்துகிறீர்களா?
ஆம்(ஆம்:10, இல்லை: 0)
தமிழ் மொழியில் Flipkart பயன்படுத்துகிறீர்களா?
ஆம்(ஆம்:10, இல்லை: 0)
தமிழ் மொழியில் YouTube பயன்படுத்துகிறீர்களா?
ஆம்(ஆம்:10, இல்லை: 0)
தமிழ் மொழியில் WhatsApp பயன்படுத்துகிறீர்களா?
ஆம்(ஆம்:10, இல்லை: 0)
இப்போது உங்கள் மதிப்பெண் என்ன?80/80


Thursday, January 14, 2021

தினத்தந்தி கட்டுரையில் பிழை

 



அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காண அவனியாபுரத்திற்கு வருகை தந்தார். அவருடன் மாணிக்கம் தாகூர் எம்.பி. மற்றும் தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் வருகை தந்தனர். இதனையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த வி.ஜ.பி. மேடையில்  ராகுல் காந்தி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியைக் கண்டு ரசித்தனர்.


ஆதாரம்: https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/14133952/Tamil-language-and-culture-are-essential-for-the-future.vpf

எழுத்துப்பிழையும், சந்திப் பிழையும்


தினமலர் கட்டுரையில் உள்ள பிழைகள்

 

டிரம்பிற்கு எதிராகப் பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேற்றம்


வாஷிங்டன்: அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில், அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக 2வது முறையாகப் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்திற்கு ஆதரவாக 197 பேர் ஓட்டுப் போட்டனர்.அமெரிக்க வரலாற்றில், முதல்முறையாக ஒரு அதிபருக்கு எதிராக 2வது முறை பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்தாண்டு, நவ., 3ல் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின், ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர், வரும், 20ம் தேதி அவர் அதிபராகப் பதவியேற்க உள்ளார். இதற்கிடையே, 'தேர்தலில் மோசடி நடந்துள்ளது' எனக், குடியரசு கட்சியைச் சேர்ந்த, அதிபர். டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். தேர்தல் முடிவுகளை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்குகளை, நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தன.

ஆதாரம்: https://www.dinamalar.com/news_detail.asp?id=2689807

சந்திப் பிழைகளும், தேவையில்லாத அரைப்புள்ளிகளும் அதிகம்

Thursday, January 7, 2021

கிரிப்டோகரன்சியும் டிரான்(TRON) நெட்வொர்க்கும்

 கிரிப்டோகரன்சி என்றாலே பலரும் பிட்காயின் மட்டும் தான் என்று நினைக்கிறார்கள். ஆனால், பிட்காயினைத் தவிர 8000க்கும் மேற்பட்ட கிரிப்டோகாயின்கள் உள்ளன. சரி, அவற்றைக் குறித்து தெரிந்துகொள்ளும் முன் கிரிப்டோகரன்சி என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். 



நீங்கள் Amazon அல்லது Flipkart போன்ற ஷாப்பிங் இணையதளங்களுக்குச் செல்கிறீர்கள். நீங்கள் 1000 ரூபாய்க்கு பொருட்களை வாங்குகிறீர்கள் என்றால் அதற்காக உங்களுக்கு 10 Amazon Coinகளையோ 10 Supercoinகளையோ அந்தந்த நிறுவனங்கள் வழங்குகின்றன என்று வைத்துக்கொள்வோம். மீண்டும் பொருள் வாங்கும்போது இந்த காயின்களைக் கொண்டு தள்ளிபடியோ அல்லது முழுப்பொருளையுமோ பெற்றுக்கொள்கிறீர்கள். அப்படியானால் அரசாங்கம் அச்சிட்ட ரூபாய் நோட்டு அல்லாத வேறொரு நாணயத்தை நீங்களும் அந்த நிறுவனமும் செல்லுபடியாகும் செலவாணியாக ஏற்றுக்கொள்கிறீர்கள். இதை கிரிப்டோகரன்ஸி என்று அழைக்கிறோம். 

https://steemit.com/ என்கிற வலைதளத்தில் தற்போது நம்மைப் போன்ற எழுத்தாளர்களுக்கும் வீடியோ படைப்பாளர்களுக்கும் அவர்களின் படைப்புகளுக்காக வழங்கப்படும் செலவாணி டிரான் (TRON), இதை டிரான் என்னும் ஒரு நிறுவனம் வழங்குகிறது. 

இந்த டிரான் நிறுவனத்தின் TRX கிரிப்டோகரன்சியை நீங்கள் பெற்றுக்கொண்டு உங்கள் வாலட்டுக்கும் அனுப்பலாம். அவற்றை ஸ்டேக் (Stake) என்னும் முறையில் சேமிப்பு வைப்பதன் மூலம் Staking rewards எனப்படும் வட்டிக்கு நிகரான வெகுமதிகளையும் அதே நாணயத்திலோ SEEDS போன்ற தொடர்புடைய வேறு நாணயங்களிலோ நீங்கள் பெறுவீர்கள். இவை 2,3 நாட்கள் இடைவெளியில் உங்கள் வாலெட்டிற்குத் தானாகவே வந்துசேரும். மேலும் தொடர்ந்து பல கிரிப்டோகரன்சிகளைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த வலைப்பூவைப் பின்தொடருங்கள்...

Tuesday, January 5, 2021

ரிட்டயர்மெண்ட் பிளான்

 தற்போது 35 வயதை நெருங்கியிருக்கும் பலரும் ரிட்டயர்மெண்ட் பிளான் குறித்து யோசிக்கத் தொடங்கி இருப்பார்கள். இன்னும் சில நாட்களில் கண்கள் சோர்ந்துவிடும், கை கால்கள் தளர்ந்துவிடும், பணியில் இருந்து அவர்களே அனுப்பிவிடுவார்கள் போன்ற காரணங்கள் அதிகம். அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிச்சயமாகவே ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் பணி ஓய்வு கொடுத்து அனுப்பிவிடுவார்கள். அதற்குப் பின் ஓய்வாக ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு வெட்டிக்கதை பேசிக்கொண்டும், செய்தித்தாளைப் படித்துவிட்டு அரசியல் பேசிக்கொண்டும் இருக்கலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், வழக்கமான வருமானம் குறைந்துவிடும் அல்லது நின்றுவிடும் என்பதால் அதற்கான சிறந்த திட்டத்தைத் தேடிக்கொண்டு இருக்கிறீர்கள். 



நான் ஒன்றைச் சொல்கிறேன். பல்வேறு வகையான முதலீடுகளைச் செய்வது மிகவும் அவசியமான ஒன்றுதான், அதை நீங்கள் எப்போதும் செய்துகொண்டே இருக்க வேண்டும். குறைந்த விலையில் அதிக வளர்ச்சியடையக்கூடிய பங்குகள், வருடந்தோறும் டிவிடெண்ட் கொடுக்கும் பங்குகள் என்று ஆராய்ந்துபார்த்து பங்குசந்தையில் முதலீடுசெய்யுங்கள். வளர்ச்சியடைய வாய்ப்புள்ள க்ரிப்டோகரன்சிகளில் முதலீடுசெய்யுங்கள். மாதம்தோறும் இவற்றுக்காக 5% பணத்தையாவது ஒதுக்கி வையுங்கள். நீங்கள் பணியில் இருந்து வெளியே அனுப்பப்படும் தருணத்தில் நிச்சயம் உங்களுக்கு இவை உதவியாக இருக்கும். 

ஆனால், நன்றாக கவனித்துப் பார்த்தீர்களானால் சில பணிகளைச் செய்பவர்கள் பணி ஓய்வைப் பற்றியோ பணி ஓய்வுக்குப் பின் என்ன செய்யப்போகிறோம் என்பதைப் பற்றியோ யோசிப்பதே கிடையாது. அரசியல்வாதிகள், நடிகர்கள், பெரும்முதலாளிகள், சமூகசேவகர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோர் மரணம் தழுவும்வரை தங்கள் தொழிலை விட்டு வெளியேற வேண்டும் என்கிற எண்ணத்தையே தங்களுக்குள் வைத்துக்கொள்வது கிடையாது. போலீஸ், மிலிட்டரி போன்ற அரசு வேலைகளில் கட்டாயம் ஒரு வயதுக்கு மேல் பணிவோய்வு கொடுக்கப்படும் என்றாலும் அதன் பின்னரும் வீட்டில் சோர்ந்து உட்கார்ந்துவிடலாம் என்கிற எண்ணத்தை வளர்த்துக்கொள்ளாதீர்கள். சமூகப்பணி, டிரேடிங், செக்யூரிட்டி, முதலீட்டு ஆலோசகர், கடைக்காரர் என உங்களுக்கு எந்தத் தொழில் ஒத்துவருமோ அதை பணிவோய்வுக்குப் பின்னும் தொடர்ந்துசெய்ய வேண்டும் என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள். 

ஏனென்றால், வீட்டில் சும்மா இருந்தால் அது உங்க்ளைச் சோம்பேரியாக்குவதுடன் நீங்கள் வாழ்வதற்கான காரணத்தையும் குறைத்துவிடுகிறது. வாழ்க்கை மீதான உங்கள் நாட்டம் குறைந்து அதன் காரணமாகவே அதிக நோய்களை உங்கள் வசம் ஈர்ப்பீர்கள். இதனால் உங்களுக்கும் உங்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கும் அதிக பாரம் ஏற்படும். செய்யும் வேலையை ரசித்துச் செய்யுங்கள், ஓய்வுக்குப் பின்னும் வேறு வேலையை ரசித்துச் செய்யுங்கள், மரணமும் சற்று தள்ளிப்போகலாம்! 

இதயம் சொல்வதைப் பின்பற்றுதல்

 இக்காலத்தில் இதயம் சொல்வதைப் பின்பற்றுதல் குறித்து அதிகமானோர் சிந்திக்கத் தொடங்கிவிட்டோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிடைத்த வேலையைச் செய்துகொண்டு வாழ்நாளைக் கழிப்பதே மனிதராய் பிறந்தவருக்கான கடமையாக இருந்துவந்தது. ஆனால், இப்போது தன் இதயத்தின் உணர்வுகளைப் பின்பற்ற வேண்டும் என்கிற எண்ணம் பலரிடம் ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றுதான். இதை எப்படிச் செய்வது என்பது குறித்து சில உதாரணங்களைப் பார்ப்போம். 

நான் பல்வேறு துறைகளில் பணிசெய்துவிட்டு இறுதியாக வீட்டிலிருந்தே செய்யக்கூடிய கணிப்பொறி சார்ந்த ஒரு வேலையில் இருக்கிறேன். ஓய்வுநேரத்தில் டிவியில் தோனி கிரிக்கெட் ஆடுவதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அவர் சிக்சர் அடித்து முடிப்பதும், சாதுரியமான விக்கட் கீப்பிங் மூலம் பலரை அவுட் செய்வதும், பந்துவீச்சாளர்களைத் திறமையாகக் கையாண்டு வெற்றிக் கோப்பையைத் தட்டிச் செல்வதையும் பார்க்கிறேன். அரங்கம் நிறைந்த கரகோஷம், ஏராளமான விளம்பரங்களில் தோனி காட்சியளிக்கிறார். சிறுவர்கள் இளைஞர்கள் எல்லோரும் தோனியைப் போல விளையாட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். 

இதன் மூலம் எனக்குள் கிரிக்கெட் வீரராக மாறவேண்டும் என்கிற ஒரு ஆசை உருவாகின்றது. அப்படியானால் நான் என்ன செய்யவேண்டும். உடனடியாக என் பணியை ராஜினாமா செய்துவிட்டு, சென்னைக்குப் பிரயாணம் செய்து கிரிக்கெட் மைதானத்தில் ஏதாவது ஒரு கிளப்பில் சேர்ந்து பயிற்சி எடுக்க வேண்டுமா?

நிச்சயம் நான் அவ்வாறு செய்யமாட்டேன். ஏனென்றால், என் வயது 35, தற்போதுள்ள வேலைக்கு வருவதற்காக என் வாழ்க்கையில் பல வருடங்களை முதலீடு செய்து இருக்கிறேன். இரண்டாவதாக, புதிதாக வேறொரு வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால் அதற்கும் அதே அளவிலான காலத்தை முதலீடு செய்ய வேண்டும். காலத்தை முதலீடுசெய்யும்போடுஹ் என்னையும் என் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள போதிய வருமானம் வேண்டும். சரி, அப்படியே கிரிக்கெட் வீரராக வேண்டும் என்று மட்டையைத் தூக்கிக்கொண்டு செல்லும்போது ஏதோ ஒரு இளையராஜா பாடல் காதில் வந்து விழ, பாடகராகவேண்டும் என்கிற ஆசை எழுந்துவிட்டால் என்ன செய்வது? அல்லது இசைஞானி ஆகவேண்டும் என்கிற எண்ணம் வந்துவிட்டால் என்ன செய்வது? 

என்னைப் பொருத்தவரை கிரிக்கெட் விளையாட ஆசை ஏற்பட்டால் பக்கத்து மைதானத்திற்குச் சென்று சிறுவர்களிடம் ஒரு ஓவர் கேட்டு விளையாடுவேன். பாட்டுப்பாட ஆசை வந்தால் ஸ்ம்யூல் போன்ற ஆப்ஸில் பாடுவேன், அல்லது குளியலறையில் குளிக்கும்போது பாடுவேன். இசை வாசிக்க ஆசை ஏற்பட்டால், 1 வருடமாவது தினமும் மாலை நேரத்தில் யாராவது ஒரு இசை வாத்திய ஆசிரியரிடம் சென்று வாத்தியக் கருவிகளை வாசிக்கக் கற்றுக் கொள்வேன். அதுவே சிறந்ததாக இருக்கும். 


உங்களுக்கு உண்மையிலேயே ஒரு விஷயத்தில் தீராத பற்று இருக்குமானால், அதை அடைவதற்கான பின்னணி பண முதலீடு, நேர முதலீடு ஆகியவற்றை நீங்கள் உருவாக்க வேண்டும். இல்லையென்றால், பொழுதுபோக்காக அவற்றை நீங்கள் வைத்துக்கொண்டு, உங்களுக்கு உணவளிக்கும் தொழிலைத் தொடரவேண்டும்! 

சிலர் சிறுவயதுமுதலே மருத்துவத் தொழிலுக்குச் செல்ல வேண்டும், அல்லது விஞ்ஞானியாக வேண்டும் என்று நினைத்து வளர்வது உண்டு. அந்த ஆசை முதலில் எவ்வாறு உருவானது? சேவை செய்ய வேண்டும் என்பதற்கா அல்லது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்கா? இரண்டில் எதுவாக இருந்தாலும் அப்படி ஒரு தொழில் செய்ய முடியாது என்கிற நிலை வரும்போது இரண்டு முடிவுகளில் ஒன்றைச் செய்யலாம் 

1. தடைகளை உடைத்து அந்தத் தொழிலுக்குள் நுழைதல்

2. அதே போன்று சேஐ செய்ய அல்லது பணத்தைச் சம்பாதிக்க வேறு வாய்ப்புகளைக் கண்ட


றிதல். 


மகிழ்ச்சியாக வாழத்தானே ஆசை, இலட்சியம் போன்றவற்றை எல்லாம் உருவாக்கிக்கொண்டோம். அந்த ஆசை நிறைவேறாதபோது ஒன்று தொடர்ந்து மேலும் கடினமாக அதற்கான உழைப்பச் செலுத்த வேண்டும், இல்லையேல் அதே நோக்கத்தை வேறு தொழில்கொண்டு செய்ய வேண்டும். ஆனால், தற்கொலை செய்துகொள்வதன் மூலம் அந்த இலட்சியத்தை உருவாக்கியதன் நோக்கத்தையே மாற்றிவிடுகிறார்கள் மாணவச் செல்வங்கள். இவர்களுடைய தற்கொலையினால் வேறு யாராவது பயனடைவார்களா என்று தெரியாது, ஆனால் இலட்சியம் நிறைவேறாவிட்டால் தற்கொலை தான் செய்யவேண்டும் என்று பல மாணவர்களும் தூண்டப்படுகிறார்கள் என்பது நம் கண்முன்னே நிகழும் கொடூரம்.  


 

Friday, January 1, 2021

கார்ப்பரேட் என்பவர்கள் யார்? அவர்கள் நமக்கு என்ன செய்தார்கள்?

பல நாடுகளில் வணிகம் செய்யும் நிறுவனத்தை நாம் கார்ப்பரேட் என்று அழைக்கிறோம். பன்னாட்டு நிறுவனம் என்பது இதன் மற்றொரு பொருள். கார்ப்பரேட் மூலம் விவசாயம் அழிகிறது, கார்ப்பரேட் மூலம் அரசாங்கத் துறைகள் தனியாருக்குச் செல்கின்றன, கார்ப்பரேட் மூலம் விலைவாசி உயர்கின்றது என்பவை எல்லாம் நாம் அறிந்ததே. நிச்சயம் கார்ப்பரேட் எல்லா துறைகளிலும் வருவது பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், கார்ப்பரேட் என்றாலே பொதுவாக நமக்கு எதிரிகள் என்கிற கண்ணோட்டம் வளர்ந்துவிட்டது. ”இந்தக் கார்ப்பரேட்டுகளால் எந்த நன்மையுமே கிடையாதா?” என்றால் இல்லை. கார்ப்பரேட்டுகளால் நமக்குப் பல நன்மைகள் உள்ளன அவற்றை கீழே பட்டியலிடுகிறேன். 1. வேலைவாய்ப்பு: அனைவராலும் அரசாங்க உத்தியோகத்தில் ஈடுபடவோ, சொந்தமாக தொழில்செய்யவோ முடியாது. பல ஆண்டுகளாக இந்தியாவில் நிலவிவந்த வேலைவாய்ப்புத் திண்டாட்டத்தை பெருமளவில் குறைத்தது TCS, CTC, Infosys, Accenture, HCL போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தான். 2. பாலின சமன்பாடு: முன்பெல்லாம் பெண்கள் என்றால் வீட்டைப் பார்த்துக்கொள்ளவேண்டும், ஆண்கள் மட்டுமே வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது போன்ற ஒரு நிலை இருந்தது. அப்படியே வேலை கிடைத்தாலும் ஆசிரியர், மருத்துவர், கணக்கர் என்கிற வெகு சில வேலைகளை மட்டுமே பெண்கள் செய்வார்கள். கார்ப்பரேட்கள் வந்த பிறகு மென்பொருள் பொறியாளர், உதவி மைய நிபுணர், உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் ஆண்களுக்குச் சமமாகவும், ஆண்களை விட அதிகமாகவும் சம்பாதிக்கும் பெண்கள் அதிகமாகிவிட்டனர். இதனால், பெண் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வதை பாரமாக நினைத்த பெற்றோர்கள் பெருவாரியாக இப்போது பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளுக்குச் சமமாக வளர்க்கத் தொடங்கிவிட்டனர். எதிர்காலத்தில் இது மேலும் வளர்ச்சியை நோக்கிச் செல்லும் என்று நம்பலாம். 3. புதிய தொழில்கள்: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பணியாட்களைக் கூட்டிச் செல்வதற்கான வாகனங்கள் (கேப்), வாகன ஓட்டிகள், அங்குள்ள அங்காடிகள், கார்ப்பரேட் நிறுவனங்களைச் சுற்றி தொடங்கப்படும் மால்கள், தியேட்டர்கள், உணவு ஜாயிண்ட்டுகள், ஜொமாட்டோ, ஸ்விகி போன்ற உணவு விநியோகச் சேவைகள் என கார்ப்பரேட் நிறுவனங்களை நம்பி தொழில் தொடங்கி, வேலைகிடைத்து குடும்பத்திற்கு வருமானம் ஈட்டிக் கொடுப்பவர்கள் பலர் உண்டு. 4. மேம்பட்ட சேவைகள்: 2500 ரூபாய் செலவுசெய்து ஒரு நாள் கூட இண்டர்நெட் கிடைக்காமல் தொலைபேசியைத் திரும்பக் கொடுத்த நியாபகம் உண்டு, அரசாங்க இணையதள சேவைகள். இப்போது கார்ப்பரேட்கள் அளிக்கும் சேவைகளுக்குப் பணம் அதிகமாகச் செலவானாலும், லஞ்சம், மெத்தனம் மற்றும் சேவை குறைபாடு போன்ற பிரச்சனைகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. கார்ப்பரேட்களின் சதியை எதிர்க்கும் அதேநேரத்தில் அனைத்து கார்ப்பரேட்களும் சதிகாரர்கள் என்கிற எண்ணத்தில் இருந்து நாம் வெளிவர வேண்டும்.

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...